Wednesday, June 16, 2010

இஸ்லாமியா வரலாற்றில் இந்த மாதம் : ரஜப்

கண்ணியமிக்க நான்கு மாதங்களில் ரஜப் மாதமும் ஒன்றகும்.

துல்கஅதா, துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகிய இந்த மாதங்களில் போர் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் இதை கண்ணியமிக்க மாதங்கள் என்று சொல்லப்படுகிறது
இஸ்ரா, மிஃராஜ்: நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து தாயிஃப் நகருக்குச்சென்று ஏகத்துவப் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்தபின்பு , மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒருவருடத்திற்கு முன் , நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம், ரஜப் மாதம் 27 ஆம் நாள் இஸ்ரா, மிஃராஜ் என்னும் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் (கஃபதுல்லாஹ்)இல் இருந்து, ஜெரூசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் (மஸ்ஜிதுல் அக்ஸா) வரை சென்றது இஸ்ரா எனப்படும்.

‘‘தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்." (குர்ஆன் 17:01) பைத்துல் முகத்தஸிலிருந்து


அல்லஹுத்தஆலாவைச் சந்திக்க நபி(ஸல்) அவர்கள் வானுலகப் பயணம் சென்றது மிஃராஜ் ஆகும்.

மிஃராஜின் போது தான் இஸ்லாமிய கடமைகளில் மிக முக்கிய கடமையாகிய "தொழுகை" கடமையாக்கப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) படைப்பிரிவு: நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த 17-வது மாதத்தில் (ரஜப் மாதத்தில்), மக்கா மற்றும் தாயிஃபிற்கு மத்தியிலுள்ள "நக்லா" என்ற இடத்திற்கு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களுடன் எட்டு முஹாஜிரீன்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பினார்கள்.

"நக்லா"வில் தங்கி அங்கு வரும் வியாபாரக் கூட்டத்தை கண்காணித்து தகவல் அனுப்புமாறுகட்டளையிட்டிருந்தார்கள் .
கண்காணிக்கச் சென்றவர்கள், அங்கு வந்த வியா- பாரக் குழுவினருடன் போரிட்டு விட்டார்கள்.
போர் தடை செய்யப்பட்ட ரஜப் மாதத்தில் முஸ்லிம்கள் போரிட்டதால் , முஸ்லிம்கள்மீது குரைஷிகள் பழி சுமத்தி செய்தி பரப்பினர்.

அச்சமயத்தில் தான் இறைவன் திருக்குர்ஆனில் 2;217 -வது வசனத்தை இறக்கி வைத்து, புனித மாதத்தில் முஸ்லிம்கள் போர் செய்ததை விட , இணைவைப்போரின் செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.

(நபியே! துல்கஅதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகிய போர் தடை செய்யத்தடை செய்யப்பட்ட ) புனிதமான மாதம் பற்றி, அதில் யுத்தம் செய்வது பற்றி உம்மிடம் அ(ந் நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர்.

(அதற்கு)நீர் கூறுவீராக:
அ(ம்மாதத்)தில் போரிடுவது பெரிதா(ன குற்றமா)கும். ஆனால், அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மனிதர்களை நீங்கள்) தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (ஜனங்களை வரவிடாது) தடுப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும், அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிதா(ன குற்றங்களா)கும். (அல்குர்ஆன் 2;217)

இஸ்லாத்தில் முதன் முதலாக ஒரு படைப்பிரிவிற்கு அமீராக நியமிக்கப்பட்டவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்கள் தான்.

தபூக் யுத்தம் : ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் தபூக் யுத்தம் நிகழ்ந்தது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன் நிகழ்ந்த முஃதா யுத்தத்தில் ரோமர்களை எதிர்த்து முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டதால் , அதற்கு பழி வாங்கும் நோக்கில் ரோமர்கள் , எந்நேரமும் முஸ்லிம்களைத் தாக்கக்கூடிய சூழல் நிலவியது. எனவே , இஸ்லாமிய எல்லைக்குள் ரோமர்கள் புகுந்துவிடுவதை தடுத்து நிறுத்த ’தபூக்’ நோக்கி நபி(ஸல்) அவர்கள் படை திரட்டினார்கள்.


அந் நேரம்.....
கடுமையான கோடைகாலம் , பேரீத்தங்கனிகளின் அறுவடை யில் ஈடுபடும் நேரம் , மக்கள் பஞ்சத்திலும் சிரமத்திலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம், சஹாபாக்களிடம் போதிய வாகன வசதிகள் இல்லை, தபூக் மதீனாவிலிருந்து நீண்ட தொலைதூரம், பாதையும் கரடுமுரடான சீரற்ற பாதை.

இத்தகைய சூழலிலும் சஹாபாக்கள் போருக்காக தங்கள் செல்வங்களை , ஒட்டகங்களை, பேரீத்தங்கனிகளை நாயகத்திடம் வாரி வழங்கி போருக்குப் புறப்பட்டனர்.
30,000-க்கும் அதிகமான வீரர்கள் போருக்கு தயாராகி புறப்பட்டுச் சென்றதால், இவர்களுக்கு போதுமான உணவு வசதி இல்லை , வாகனவசதி இல்லை. எனவே இப்படைக்கு"கஸ்வத்துல் உஸ்ரா" வறுமைப் படை என்றும் பெயர் வந்தது.
இஸ்லாமியப் படை தபூக் வந்ததை அறிந்த ரோமனியப்படையினர்போர் செய்ய துணிவின்றி தங்களது நாட்டிற்குள்ளேயே ஓடி ஒளிந்தனர். எனவே யுத்தமின்றி இஸ்லாமியப்படையினர் வெற்றி வாகை சூடியவர்களாக மதீனா திரும்பினார்கள். வெளியில் இஸ்லாத்தையும், உள்ளத்தில் நயவஞ்சகத்தையும் கொண்ட முனாஃபிகீன்களும், எவ்வித காரணமுமின்றி முஸ்லிம்களில் கஃப் இப்னு மாலிக்(ரழி), ஹிலால் இப்னு உமையா(ரழி), முராரா இப்னு அர்ரபிஉ (ரழி) ஆகிய மூவரும் தபூக் யுத்ததிற்கு செல்லவில்லை.
அம் மூன்று சஹாபாக்களும் மனம்வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரியதால் , அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு குர்ஆனில் 9;118 -வது வசனத்தை அருளினான்.
ஸரியத்துல் கபத் என்ற "கபத்" படைப்பிரிவு: ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அபூஉபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரழி) அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்.

குரைஷிகளின் வியாபாரக்கூட்டத்தை இவர்கள் எதிர்பார்த்து பதுங்கி இருந்த போது கடுமையான பசியின் காரணமாக காய்ந்த இலைகளை சாப்பிட்டனர். இதனால் இப்படைக்கு "ஸரியத்துல் கபத் - இலைப் படை" என்று பெயர் வந்தது.
அதற்கு பின் அவர்களுக்கு கடலிலிருந்து "அம்பர்" என்ற பெரிய மீன் கிடைத்தது. அம்மீனை சுமார் 15 நாட்கள் வைத்து சாப்பிட்டார்கள். துஆ:"அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜப, வ ஷஅபான், வ பல்லிஃனர் ரமழான்" யா அல்லாஹ்! ரஜப் மற்றும் ஷஅபானில் எங்களுக்கு பரக்கத்செய்வாயாக! ரமழானை அடையும் பாக்கியத்தை எங்களுக்குத் தருவாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் இந்த ரஜப் மாதத்தில் துஆச் செய்வார்கள்.

தொகுப்பு:
மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி
துபாய் (055 9764994)

இது எனக்கு மெயில் வந்தது.


6 comments:

sahana said...

ரஜப் மாதத்தைப் பற்றி நல்ல விளக்கம் கொடுத்து இருக்கீங்க.மேலும் பதிவுகளைத் தொடர அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Jaleela - உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க
http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html

Jaleela Kamal said...

நன்றி அப்பாவி தங்கமணி இந்த இடுகையை இப்ப தான் பார்த்தேன்.

Jaleela Kamal said...

நன்றி ஸ்வேதா

Jaleela Kamal said...

ஷஹானா வாங்க இது மெயில் தகவல் அதை இங்கு பகிர்ந்துள்ளேன்.

Jaleela Kamal said...

ஸ்வேதா, ஷஹானா, அப்பாவி தங்கமணி உங்கள் மூவரின் வருகைக்கும் மிக்க நன்றி